வெள்ளி, 8 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 6 (பகுதி -1) லண்டன் மருத்துவரும் அகத்தியரும்

   அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 6 :    பகுதி - 1  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -1)

          London Doctor Vs Agasthiyar

லண்டன் மருத்துவரும் அகத்திய & திருமூல சித்தரும்!!




 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 


அகத்தியரும் திருமூலரும்

கருணை  புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  6 (பகுதி - 1)





அனுமத்தாசன் அய்யா  கூறுகிறார்.....!

 


அகத்தியர் எல்லோருக்கும் அதிசயங்களை செய்துவிட்டால் மிகப் பெரிய மகிழ்ச்சிதான்.  சிலருக்கு எல்லாமே உடன் நடந்து விடுகிறது.  பலருக்கு சில காலம் தள்ளி நடக்கிறது.  

 

இன்னும் ஒரு சிலருக்கு  எத்தனையோ பரிகாரங்கள் செய்தாலும் நடப்பது இல்லை.

 

இதற்கு என்ன காரணம்?

 

இது பற்றி பலதடவை நானும் யோசித்தேன்.  

அகத்தியரிடமே ஜீவ நாடியில் கேட்டேன்.

 

"எல்லோருடைய விதியையும் நான் மாற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு கொடுத்து வருகிறேன்.

 

ஆனால் வரிசை வரிசையாகத்தான் நடக்கிறது.  

ஒருவேளை நிறைய பேர்களுக்கு அருள்வாக்கினை அள்ளித் தருவதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.  

 

அல்லது "பிரம்மா" என் வேண்டுகோளை தாமதமாக நிறைவேற்றலாம்.  சிலசமயம் அவர் விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்பாமலும் தடுக்கலாம்.  

 

இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.  அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" என்றார்.

 

ஜீவ நாடியில் அகத்தியர் சொன்ன போது என் மனதுக்கு வருத்தமாக இருந்தது.

 

ஜீவ நாடி பார்க்க வருபவர்களில் பலவித குணங்களை கொண்டவர்கள் உண்டு. அகத்தியர் சொல்வதை அப்படியே சிரம் மேற்கொண்டு செய்து நன்மை அடைபவர் ஒரு விதம்.  

 

அகத்தியரை மதித்தாலும் அவர் வார்த்தையை மதிக்காமல் தனக்கு தோன்றியபடி செய்து, மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, பின்னர் என்ன செய்வதென்று அறியாமல், அவரிடமே ஓடி வந்து சரணடைந்து, பின்னர் அந்த ச்ரமங்களை சிலகாலம் கூட அனுபவித்து கழித்து, நிறைய பரிகாரங்களை செய்து மீண்டும் நல்வழிக்கு வந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு நடப்பவர்கள் இன்னொரு விதம்.  

 

எத்தனை பெரிய தவறை செய்தாலும், "சரணம்" என்று வந்துவிட்டால்,

சித்தர் கூட உதவுவார், என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

 

அன்றைய தினம் மிக அமைதியாக விடிந்தது.  நிதானமாக பூசை, தியானம் போன்றவை முடித்துவிட்டுஜீவ நாடியுடன் வெளியே ஹாலில் வந்து அமர


"மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சை ஒன்றைச் செய்யப் போகிறேன்.  

இதற்கு அகத்தியர் அருள் வேண்டும்" என்று கேட்டார்லண்டன் நாட்டிலிருந்து  வந்த ஒரு இளம் மருத்துவர் ஒருவர்.

 

"நல்ல விஷயம்தான் செய்யப் போகிறீர்கள்.  நல்ல படியாக வெற்றி பெறும்.  கவலைப்பட வேண்டாம்" என்று பொதுவாக அந்த மருத்துவரை நான் வாழ்த்தினேன்.



"உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகத்தை தந்தாலும்,  அகத்தியர் ஜீவ நாடியையும் ஒரு தடவை படியுங்களேன்" என்று

மறுபடியும் கேட்டுக் கொண்டதின் பேரில்,

அகத்தியரின்  ஜீவ நாடியைப் புரட்டினேன்.

 


சில பிரார்த்தனைகளைச் செய்யச் சொல்லி "இதைச் செய்து விட்டு கீறல் வைத்தியத்தைச் செய் வெற்றி பெறுவாய்" என்று அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்தார்.




சந்தோஷப்பட்டாலும், "நான் தைரியமாக இறங்கிச் செய்யலாமா?"

என்று மீண்டும் கேட்ட பொழுது அவர் மீது எனக்கே எரிச்சல் வந்தது.




"எத்தனை தடவைகள்,

எத்தனை முறைகளில் கேள்வி கேட்டாலும்,

அகத்தியர் பதில் ஒன்றுதான்"

என்று சட்டென்று நானே பதில் கூறினேன்.



ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!



முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  
நன்றிகள் 

★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/



 முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 4  (பகுதி -1)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!





வியாழன், 7 டிசம்பர், 2023

ஜீவநாடி அற்புதங்கள் 5 (பகுதி -10) கோடீஸ்வர பரதேசியும் அகத்தியரும்

   அகத்தியரின் ஜீவநாடி அற்புதம் # 5 :    பகுதி - 10  


முந்தைய பகுதிக்கு :  

ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி -9)

          கோடீஸ்வர பரதேசியும் 

ஜீவநாடி அகத்தியரும் !!



 அகத்தியர்

( ஜீவநாடி மூலம் புரிந்த )
அற்புதங்கள் !! 



அகத்தியர் & போகர் கருணை புரிந்த அற்புதங்கள் !!


ஜீவநாடி அற்புதங்கள் # :  5 (பகுதி - 10)

அனுமத்தாசன் அய்யா  தொடர்ந்து..கூறுகிறார்.....!

 

என் முன்பு வந்து நின்ற மாடசாமியின் இளம் வயது மனைவியைப் பார்த்தேன்.  கிராமத்துச் சூழ்நிலையில் வளர்ந்த பெண். கண்களில் கபடு, சூது இல்லை.  உடம்பு தேறி வருவதற்கான அறி குறிகள் தென்பட்டது.

 

"எப்படியம்மா இருக்கே ?"

 

"அய்யா. எட்டு வருஷமா நெஞ்சில் வலி இருந்துக்கிட்டே இருந்துச்சு.  நானும் போகாத டாக்டர் இல்லை.  பார்க்காத வைத்தியம் இல்லை.  இருக்கிற நிலத்தை வித்து எங்க அப்பாவும், அண்ணனும் நிறைய செலவழிச்சு பார்த்துட்டாங்க.  ஆனா குணமாகலை."

 

"இப்போ எப்படி இருக்கே. அதை மொதல்ல ஐயா கிட்டே சொல்லுன்னு" அவளது பேச்சை இடை மறித்தான் மாடசாமி.

 

"கொல்லிமலை வைத்தியர் கிட்ட வாங்கிட்டு வந்த மூலிகைச் சாறை சாப்பிட்டு வந்தேங்க. இப்போ நெஞ்சில் வலி இல்லீங்க. மூச்சு நல்ல விட முடியுது.  பசியும் எடுக்குது.  சந்தோஷமா இருக்கேனுங்கய்யா!

 

"அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி!" என்றேன்

 

பிறகு மாடசாமியின் பக்கம் திரும்பி எப்படியோ உன் பொண்டாட்டியும் குணமாயிட்டா.  உன் அண்ணன் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுப் போச்சு.  கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது சரி, அப்புறமா அந்த கொல்லிமலை சித்தர்கிட்டே போனாயா?" என்றேன்.

 

"ஒரு தடவை போய் வந்தேனுங்க.  அதுல பாருங்க ஒரு ஆச்சரியம்.  நான் எங்கே அவரைப் பார்த்தேனோ, அந்த இடத்துல இப்ப குடிசையும் இல்லை - சித்த வைத்தியரும் இல்லை.  அக்கம் பக்கத்லே விசாரிச்சதிலே இதுவரை அங்கு குடிசை போட்டு எந்த வைத்தியரும் குடி இருக்கலைன்னு சொல்றாங்க.

 

"அப்படியா?"

 

"எப்படியோ-யார் செஞ்ச புண்ணியமோ? எங்க அண்ணனுடைய குழந்தைக்கும் பார்வை கெடைச்சுப் போச்சு. என் மனைவிக்கும் உடல் நலம் சரியா போச்சு, ரொம்ப நன்றிங்க.  அதை சொல்லத்தான் குடும்பத்தோட உங்களை பார்க்க வந்தோம்", என்று சொல்லி முடித்து கொண்டான் மாடசாமி.

 

அடுத்தபடியாக "பிழைப்புக்கு என்ன பண்ணப்போறீங்க.  பழயபடி அடிதடி, கொள்ளை, கொலைன்னு இறங்கிட போறீங்களா?" என்று கிண்டலாய் கேட்டேன்.


அவர்களுக்காக, அகத்தியரிடம் பிரார்த்தனை செய்து நாடியைப் பிரித்தேன். மாடசாமிக்கும், அவன் அண்ணனுக்கும் அகத்தியர் சில அறிவுரைகளை கூறினார்.

 

"ஞாயிறு தோறும் சூரிய வழிபாட்டை செய்து வாருங்கள்.  ஆறாவது ஞாயிறன்று உங்கள் இருவருக்கும் கை நிறைய சம்பளத்தோடு, நல்ல இடத்திலிருந்து வேலை கிடைக்கும்.  ஆனால் ஒரு நிபந்தனை, வாங்குகிற பணத்தில் ஒரு சிறு காணிக்கையை மாதத்திற்கொரு நாள் அநாதை குழந்தைகளின் உணவுக்காக கொடுத்து விட வேண்டும்" என்று உத்தரவும் போட்டார்.

 சந்தோஷமாக ஏற்று கொண்டனர்.


அகத்தியர் அருள் வாக்குப்படியே அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், தன கம்பனியில் வேலை போட்டு கொடுத்தார்.  அதுவும் அவர்கள் பிராத்தித்து முடித்த ஆறாவது ஞாயிறன்று கிடைத்தது.

 

அவர்கள் இருவரும் சேர்ந்து, அகத்தியருக்குரிய மரியாதைக் கொடுக்க விரும்பி அனாதைக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தங்களால் முடிந்த தொகையை காணிக்கையாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அகத்தியர் காட்டிய வழியில் சென்று சித்த மருத்துவம் படித்து, ஏராளமான பேருக்கு தன்னால் இயன்ற மருத்துவ உதவிகளை மனம் கோணாமல் இன்று வரை செய்து கொண்டிருக்கிறான் மாடசாமி, என்பது தான் ஆச்சரியமான செய்தி.


மாடசாமியின் உடன் பிறவாச் சகோதரனுடைய குழந்தைக்கு இழந்து போன கண் பார்வை மீண்டும் வந்துவிட்டதால், அந்த குழந்தையின் பெயரிலேயே யார் யாருக்கு கண் நோய் இருக்கிறதோ, யாரெல்லாம் கண் நோய்க்கு மருந்து வாங்க வசதி இல்லாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தன்னால் இயன்ற உதவிகளை மாடசாமியின் அண்ணன் செய்து வருகிறான்.

 

ஒரு தாதாவாக, கொலை கொள்ளை செய்பவனாக இருந்தவர்கள், அகத்தியரின் அருள் வாக்கினால் எப்படி மென்மையாக மாறிவிட்டார்கள், என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது.


அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.

 

"என் அருமை சீடன் போகன்தான் அவன்.  அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது.  இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.

அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?

 

"கிடைக்கும்.  போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.  உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".

 

"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது.  எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே!  யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.

 


"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும்.  துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"

 

மற்ற வைத்தியர்கள் எல்லாம்?

"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள்.  அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.

 

இதை கேட்டதும் எனக்கு ஒரு மன நிம்மதி.  

என்றேனும் ஒருநாள் கொல்லி மலைக்குச்  
சென்று
போகரை நேரிடையாகச் சந்திக்க வேண்டும் 

என்ற ஆசையும் பிறந்தது.



 "போகர் தரிசனம், அவர் தன் கைப்பட எழுதிய மிக அற்புதமான மருத்துவ நூல் ஓலை வடிவிலேயே உனக்கு கிடைக்கும்.  அதனைப் படித்து மற்றவர்கள் பயன்படும் வகையில் ஒரு அற்புதமான நூலை பிற்காலத்தில் நீ எழுதப் போகிறாய்" என்று பின்பொருநாள் அகத்தியர் ஆசியும் வழங்கினார்.



ஶ்ரீ அகத்தியர் பதம் போற்றி!!
ஶ்ரீ போகர்பதம் போற்றி!!

முழுதும் வாசித்த அனைவருக்கும் ..  நன்றிகள் 


★ கருவூரான் 
www.t.me/jeevanaadi/  &   https://siththarkaldesam.blogspot.com/


இதன்  முந்தைய தொடர்ச்சி  :  ஜீவநாடி அற்புதங்கள் 5  (பகுதி -9)

&

முந்தைய பகுதிக்கு :    ஏமாற்றும் வேலை முகவரை திருத்திய நந்தீசர் !!